வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் கஜலட்சுமி




 அழகு மிகுந்த தேவியாகவும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் குணவதியாகவும், பக்தர்களின் மனக்குறை நீக்கும் அதிர்ஷ்ட தேவதையாகவும் விளங்குபவள் மகாலட்சுமி. சைவம், வைணவம் என இரு பிரிவு பக்தர்களாலும் மகாலட்சுமி கொண்டாடப்படுகிறாள்.

பாற்கடலில் திருமகள் தோன்றியபோது, எட்டு திசை யானைகளும் தம் மனைவியரோடு வந்து மகாலட்சுமியை மங்கள நீராடி வழிபட்டன. அதனாலே அவள் கஜலட்சுமி என போற்றப்படுகிறாள். வேதமந்திரமான ஸ்ரீ ஸூக்தம் அவள் யானைகளின் பிளிறல்களை கேட்டு மகிழ்பவள் என்று போற்றுகிறது.

நமது ஜாதகரீதியாக எத்தனை கொடிய தரித்திர யோகமிருந்தாலும், சிலரின்  சாபத்தாலோ, பலரின் வயிற்றெரிச்சலாலோ அல்லது கர்மவினை, செய்வினை மந்திரப்பிரயோகத்தாலோ எது எப்படியிருப்பினும் திட மனதுடன், தளராத மன உறுதியுடன், விடா முயற்சியால் இந்த கஜலட்சுமி பூஜை செய்தால் நமது தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது அனுபவ உண்மை.

வளர்பிறை வெள்ளிக்கிழமையும்,திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில் இந்த பூஜையை ஆரம்பித்து தொடர்ச்சியாக 24 வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும்.திரு ஓணம் வரும் வெள்ளியன்று நீராடி தூய உடை உடுத்தி,குலதெய்வத்தை மானசீகமாக வேண்டிட வேண்டும்.பிறகு விநாயகரை மனதார வேண்டி 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இந்த பூஜை நடைபெற உதவுமாறு வேண்டி வழிபட்டு, தியானிக்கவேண்டும்.

அதன்பிறகு இஷ்ட தெய்வத்தையும் பூஜித்து வழிபட்டு காலையில் சுக்கிர ஓரையில் இந்த தனம் தரும் கஜலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும்.

நுனி வாழையிலையில் நெல்பரப்பி,அதன் மீது மற்றொரு இலை வைத்து பச்சரிசி பரப்பி அதன்மீது புதுமண்கலசம் அல்லது புதுகலசச் சொம்பு வைத்து அதில் நூல் சுற்றி அதன் உள்ளே அஷ்டகந்தம் என்னும் எட்டு விதமான வாசனைப் பொருட்கள், குண்டு மஞ்சள், வெட்டிவேர், பன்னீர், வெள்ளிக்காசு முதலியனவற்றை விட்டு அதன் வாயில் மாவிலை வைத்து புதிய நல்ல தேங்காயை வைத்து, அத்துடன்  கலசத்தில்  பொட்டு வைத்து, பூவைத்து,சிகப்புப் பட்டு ஆடை சார்த்திவைக்க வேண்டும்.

கலசத்தின் முன்பு நெய்யால் தீபம் ஏற்றிட வேண்டும்.இலையில் தாம்பூலம்,தேங்காய்,பழம்,லட்டு,பாலில் செய்த இனிப்பு வகை ஒன்று, வெண் மொச்சை,சுண்டல் முதலியவற்றைப் படைக்க வேண்டும்.அந்த கலசத்தில் சவுபாக்கிய லட்சுமி எழுந்தருளும்படி வேண்டிட வேண்டும்.

அதன்பிறகு சோடேசபூஜை என்னும் பதினாறுவகை உபச்சாரங்கள் செய்யவும்.(புத்தகக் கடைகளில் சோடேச பூஜை செய்யும் முறை என்ற புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளவும்)சவுபாக்கியமகாலட்சுமியிடம் நமது தரித்திரம்,பணக்கஷ்டம்,பணப் பற்றாக்குறை நீங்கிட வேண்டவேண்டும்.

செல்வத்தை வாரி வழங்கும் ஸ்ரீகஜலட்சுமியை மனதார வேண்டியவாறு
ஓம் ஸ்ரீம் ச் ரீயை நம தனம் ஆகர்ஷய ஆகர்ஷய
என்ற மூல மந்திரத்தை 1008 முறை மெதுவாகவும்,நிதானமாகவும் ஜபிக்க வேண்டும்.
அதன்பிறகு,மல்லிகை இதழ்களால் அல்லது தாமரை இதழ்களால் ஓம்ஸ்ரீமகாலக்ஷ்மி சவுபாக்கிய தாரண்யை நம என்று 108 முறை அர்ச்சிக்க வேண்டும்.அர்ச்சித்தப்பின்பு,தூபதீப நைவேத்தியம் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் இந்த கலசத்தைக் கலைக்காமல் அப்படியே வைத்திருந்து அடுத்தடுத்த வாரங்களில் கலசத்தில் சிறிது நீரும் வாசனைத் திரவியமும் சேர்த்து பூஜை செய்யவேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் வீதம் 24 வெள்ளிக்கிழமைகள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது காலை 6 முதல் 7 மணிக்குள் செய்துவரவேண்டும்.

இந்த பூஜையை தொடர்ந்து செய்யவிடாமல் நமது கர்ம வினைகள் தடுக்கலாம்;அதையும் மீறி பக்தி,வைராக்கியத்தால் தொடர்ந்து செய்து பெரும் செல்வ வளத்தை அடைவீர்களாக!